தமிழரின் தொன்மையும், கலாச்சாரமும், பண்பாடும், மேம்பட்ட தொல்லிய நாகரீகமும் உலகறிந்த ஒன்றாகும். தமிழர்களின் கட்டிடக் கலையும், சிற்பக்கலையும் பார் போற்றும் ஒன்றாகும். அதற்கு யுனஸ்கோ அமைப்பு பல்வேறு தமிழக கட்டிடக் கலைக்கும், கோவில்களுக்கும், கோட்டைகளுக்கும் பாரம்பரிய அந்தஸ்து வழங்கி அழகு பார்ப்பதே அதற்கு கூடுதல் சான்று ஆகும்.
தமிழர்களின் அரும் பெரும் கலைகள் எண்ணற்றவை! அந்த வகையில் தமிழரின் வாழ்வியலோடு ஒன்றற கலந்து இருப்பவை நமது நாட்டுப்புற கலைகள் ஆகும். அதனை உலகறிய செய்ய வேண்டும் என்கிற உன்னத நோக்கில் நியூ ஜெர்ஸி தமிழ்ப் பேரவை ஒரு மகத்தான மற்றும் சவாலான காரியம் ஒன்றினை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்று கின்னஸ் உலக சாதனையும் படைத்து இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு பெரும் மெனக்கீடு செய்து, நியூ ஜெர்ஸி, டெலாவர் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களின் வசிக்கும் தமிழர்களை ஒன்றிணைத்து பெரியோர், சிறியோர், மாணாக்கர்கள், என்று பலரும் ஒன்று திரண்டு பெரும் அரங்கிலும், பூங்காவிலும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு இந்த மகத்தான, தமிழர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரிய இந்த அரிய காரியத்தை நிறைவேற்றி வெற்றி கண்டு இருக்கிறார்கள்.
இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வில் 500 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, ஏராளமான தமிழர் நாட்டுப்புறக் கலைகளை நிகழத்திக்காட்டி இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்வை நடத்தி முடித்து தமிழருக்கும், தமிழ்க் கலைகளுக்கும் பெருமை சேர்த்து இருக்கிறார்கள் நியூ ஜெர்ஸி தமிழ்ப் பேரவை குழுவினர்.
